டெல்லி -
பிரதமர் மோடியை திருடன் என கூறிய வழக்கில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசும்போது, ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று உச்சநீதிமன்ற நீதிபதியே கூறிவிட்டதாக தெரிவித்தார்.
இதற்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
ராகுல்காந்திக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் பாஜக எம்.பி. மீனாட்சி லேகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இதனையடுத்து தனது பேச்சுக்குவருத்தம் தெரிவித்து ராகுல்காந்தி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.
ஆனால், ராகுல் காந்தியின் பதிலில் திருப்தி இல்லை என கூறி விரிவான விளக்கம் அளிக்குமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி ராகுல்காந்தி நேற்று பதில் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் ராகுல்காந்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மீனாட்சி லேகி தரப்பு வழக்கறிஞர் வாதாடும்போது, ராகுல்காந்தி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருப்பது வெறும் கண்துடைப்புதான் என்றும், அவரது பதில் மனுவை நிராகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ராகுல்காந்தி வருத்தம் தெரிவித்ததற்கு பதில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என கண்டித்தனர்.
இதையடுத்து, பிரதமரை திருடன் என உச்ச நீதிமன்றம் கூறியதாக பேசியதற்கு, மன்னிப்பு கேட்பதாக ராகுல்காந்தி தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
மேலும் மே 6-ம் தேதி ராகுல் காந்தி புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்வார் என அவரது வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி கூறினார்.
இதையடுத்து வழக்கு விசாரணை மே 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.